ஹாய் ,ஹாலோ என் இனிய வாசகர்களே எல்லோருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
என்னப்பாவிற்கு படிக்கத்தெரியாதுஅம்மா நான் பக்கத்து வீட்டு அக்கா என எண்ணிப் பதினேழு தொடர்புகளையே ஏந்தியிருக்குமந்த நோக்கியாவில் அவர்க்கு இரண்டு பட்டன்களே போதுமானதாகியிருக்கிறது. இன்னமும் சூரியனுக்கு முன்பாக எழுந்து வெந்நீரோடு எனை எழுப்பும் பழக்கம் அவரை விடவில்லை. கோழிக்கும் நாய்க்கும் சேர்த்து வாங்கிவரும் யாவிலும் காட்டத்தெறியாத அவர் பாசம் வெளிப்படுகிறது. சதா எங்களிடம் திட்டு வாங்குமந்த சேட்டைகளும் அப்படியேதானிருக்கிறது. முன்போல் அவர் கடிந்து கொள்வதில்லை. மவுனத்தை அதிகம் சூடிக்கொள்கிறார். சதா ஓடுமந்தக் கால்கள் நிற்க நிழல் தெடுவதில்ல.. நிழல் திருடி எனக்குக் குடையாக்கும் அந்தக் கரங்களில் மென்மை தொலைந்து வருடங்கள் பலவிருக்கும் என்பதை நான் மறந்திருந்தேன். நெளிந்து வரும் அத்தேகத்திற்கு மாடிக்காற்றில் தூங்கும் பழக்கமதிகம் அதிலொரு சுகம் புதைந்ர பெருங்கனவுண்டு.. அதை மறைத்திருக்கும் அவர் கண்கள் பிறர்வீட்டுக் கூரை மேலாக விரிய அத்தனை போராட்டம் செய்யும்...கடைசியாய் மாமன் வீட்டு படியேறிய அவர் தேய்ந்த கால்களின் நரம்புச்சுருக்கங்கள் எப்போதேனும் என் குரல்வளை நெருக்கும்..!அவரைச் சுமக்குமந்த சைக்கிளின் துரு ஒவ்வொன்றிலும் என்றென்றோ நிறேவேறிய என்னாசைகளின் எதிரொலி கேட்கும். நண்பகல் வரையிலுமான பசியை ரெண்டு டீக்குள்ளாக அடக்கிவிடும் அந்த வயிற்றுக்கென்ன பிடிக்கும் என்னென்ன பிடிக்கும் ஒரு நாள் நான் கேட்டேன் ஒரு புன்னகையோடு ஒருபிடி சோறு அம்மாவின் கையிருந்தும் என் கையிருந்தும் அவ்வளவுதான்..! எந்தக் கொண்டாட்டங்களிலும் அவரேதும் கேட்டது நினைவில்லை எப்போதாவது கொஞ்சம் கள்ளத்தனமாய் ரெண்டு பாக்கு கொஞ்சம் மூக்குப்பொடி ..!அவர்க்கு தெரிந்ததைச் சொல்வார் என் காதுகள் கேட்டும் கேட்காமலும் கடக்கும் அம்மாவிடம் பிடித்ததை கேட்பேன் காலை அப்பாவிடம் கிடைக்கும்..! இன்னும் மாறாத அந்த ரப்பர் செருப்பு பழைய கடியாரம் நான்காவது முறையாக புது ஆடி பொருந்திய அதே மூக்குக் கண்ணாடி ஃப்ரேம்கள் எல்லாம் அவரற்ற தனிமையில் என்னோடு பேசும்.. நான் அடிக்கடி வாங்கும் புதுச்சட்டைகளோடே காலர் கிழிந்த அவர் சட்டை சலவையில் மினுக்கும்.. காக்கா கடி கடித்து ஜிம்மிக்கு அவர் வீசும் அந்த பிஸ்கட்டில் கசியும் அவர் காதலுக்கு வாலாட்டுமவனிடம் எனைவிட நேசம் சொட்டும்...கொஞ்சம் காய்ச்சல் சின்னதாய் தலைவலி முள்குத்திய பாதம் என எமக்கென்றால் துடிக்குமவர் கைகளை பாதங்களின் வலிகளை வெளிப்படுத்தாத அந்தக் கல்மனம் இன்னமும் மழலையாகத் தானிருக்கிறது... நான் நூறைச் சில்லறையாகப் பார்க்குமிந்த நேரம் அவர் சட்டைப்பையில் காசுகள் துள்ளலிடுகிறது. அதை அப்படியே இரவு உண்டியல் சேர்க்குமவர் விரல்களிலான சந்தோசம் நோட்டுகள் தழுவும் என் விரல்களில் சிறிதுமில்லை..! இப்போது ஏனிப்படி ஒரு உளறல் என்கின்றீரா ? இந்தப் புலம்பல் ஏனென்று சொல்லவா? யாரோ ஒருவன் தன் தந்தைக்கான வாழ்த்தை அவரற்ற இடத்தில் வைத்தான்.. நண்பா உன் தந்தைக்குமாக எனது வாழ்த்துகளென்றான். நீயுமேதோ ஒன்றின் வழி வாழ்த்து என்றான். ஏனென்றேன் சில மகன்களுக்காக ஏன்று சொல்லிப்போனான்...! ஏனோ ? ஒரு மாத்திரைக்குள்ளாக ஒளிந்து போகும் அவர் பிணிக்கும் உணவு செரிக்க ஈனோ கேக்குமென் பிணிக்குமான பரிணாம வேறுபாடுகளை பிரித்தறிய நெடுங்காலம் தேவையாகியிருக்கிறது...இன்று அவனால் ஏனோ எனக்கது புலப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்..!
எல்லா தந்தையர்களும் சமர்ப்பணம்.கவிதை என்னுடையதல்ல என்தோழியின் தோழர் எழுதியது ....
நன்றியுடன் ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக