காதலித்து கெட்டு போ.
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி..
நா.முத்துக்குமார் "" துளிப்பாக்கள் ""
உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்.
-------------------------------
குழந்தைகள்
கை காட்டாத
கூட்ஸ் ரயிலில் இருந்து
கொடியசைத்துப் போகிறான்
கடைசிப் பெட்டியில் கார்டு.
-------------------------------
சிறகுகள் உதிர்த்து
வெளிவரும் பறவை
கூண்டிற்கு விடுதலை.
--------------------------------
பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணடிகள்.
வாழ்க்கை
கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்
..
ஸ்தல புராணம்
பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!
தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!
..
மரணம் பற்றிய வதந்தி
திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
"இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!
..
உயில்
மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!
..
குட்டி புத்தரின் கோபம்
"" இவர் பேரு புத்தர்
இன்னொரு பேரு ஆதவன்
அந்தப் பேரைத்தான்
உனக்கு வைத்திருக்கிறேன்!''
என்றேன் மகனிடம்.
கோபமாக சொன்னான்;
""அவர் பேரு புத்தர்
நான்தான் ஆதவன்!'
..
நெஞ்சொடு கிளத்தல்
சுடலையேகி வேகும் வரை
சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்!
..
உள்ளும் புறமும்
அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன!
..
நில் கவனி செல்
மாநகரத்துச் சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி!
..
முதல் காதல்
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
கூர்வாள்
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்
—-
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க
..........................................................
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஹைக்கூ கவிதைகள்:
”கருப்பு வெள்ளைப் புகைப்படம்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்” 3
மணல் திருட்டு:
”பறவைகள் முகம்பார்க்க
கண்ணாடியின்றி திரும்பின
வறண்டு போன நதி”
”ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க”
பெண்சிசு கொலை:
”வயற்காட்டு எலியே
உனக்கும் பெண் சிசுவா?
பின் ஏன் நெல்”
பிளாஸ்டிக் பை:
”கடற்கரையில் ஊற்று தோண்டியதும்
கையில் கிடைத்தது
பிளாஸ்டிக் பை”
வறுமைநிலை:
“எத்தனையோ வீட்டுக்கு படியளந்தவர்
இன்றைக்கும் வறுமையில்
கட்டிட மேஸ்திரி”
”எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை”
”இன்று வேண்டாம்
நாளை வா நிலா
ஊட்டுவதற்குச் சோறில்லை”
.
சுதந்திரம்:
”புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்”
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் நா.முத்துகுமாரின் புத்தகத்தில் இருந்து.
மகன் கேட்டான் :தாத்தா எதற்கு கடன் வாங்குனாரு?
அப்பா: தாத்தா நெறைய புக்ஸ் படிப்பார் அதானல கடன் வாங்குனாரு.
மகன் : நல்ல விஷயம்தான்ப்பா. நீங்களும் நெறைய புக்ஸ் படிங்க நா உங்க கடன அடைக்கிறேன்.
நா. முத்துகுமாரின் இழப்பு நமக்கு மட்டும் அல்ல…கவிதைக்கும் பெரும் இழப்பும் தான்.
நன்றி
shree
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக